நகத்தால் கிள்ள வேண்டிய பிரச்சனையை கோடாரியால் வெட்டுவதா?: விஜய்காந்த்
சென்னை:
மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நகத்தால் கிள்ள வேண்டிய சாதாரண பிரச்சனையை அரசு கோடாரியைக் கொண்டு வெட்டி பெரிதாக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
பேருந்தில் பயணம் செய்யும்போது கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை வைத்து கொண்டு மறுநாளே மாநிலக் கல்லூரியின் இரு மாணவர்களை கைது செய்ய போலீசார் ஆயுதபாணியாக கல்லூரிக்குள் சென்றுள்ளனர். அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டு உள்ளனர்.
அதற்குள் பெருமளவில் போலீஸ் படை குவிக்கப்பட்டதால் மாணவர்கள் கல்லூரி வாயிற் கதவுகளை மூடிவிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இவ்வளவு நடந்த போதும் கல்லூரி முதல்வரை போலீசார் முறையாக பயன்படுத்த தவறியது ஏன்? திடீரென கல்லூரி உள்ளே புகுந்து கண்முடித்தனமாக மாணவர்களை மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். இதில் கண் பார்வையற்ற மாணவர்களும் சிக்கி தவித்துள்ளனர்.
போலீசார் கற்களை எறிந்தும் மாணவர்களை காயப்படுத்தியுள்ளனர். இந்த அமளியில் மாணவன் கணேஷ் ஆனந்த் தற்கொலை செய்து கொண்டது வேதனைக்கும், அதிர்ச்சிக்கும் உரிய சம்பவமாகும். ஆரம்பத்திலேயே போலீசார் குறிப்பாக உதவி கமிஷனர் மட்டத்தில் பொறுப்போடு செயல்பட்டிருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது.
இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் போலீஸ் கமிஷனர் தனக்கு தெரியாது என்று தெரிவித்தது விசித்திரமானது.
நகத்தால் கிள்ள வேண்டிய பிரச்சனையை திமுக அரசு கோடாரியைக் கொண்டு வெட்டி கொண்டுள்ளது. இச்சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை மாற்றி, அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீதான வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.