ஹவாலா பண மோசடியில் 2 பேர் கைது
சென்னை:
வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்புவதாக கூறி ஹவாலா பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பிய தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த எஸ்கான் கன்சல்டன்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் வேணுகோபால். இதே நிறுவனத்தின் மேலாளராக இருப்பவர் ரத்தினம்.
இருவரும் இன்று காலை சுங்கத்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் சிக்கினர். இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்னர்.
இந்த நிறுவனம் 11 பேரை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி , அவர்கள் மூலம் பெருமளவு ஹவாலா பணத்தை அனுப்பி வைக்க முயன்றது. இதையடுத்து சுங்கத்துறையினர் வேணுகோபாலின் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவரும், மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட 11 பேரிடமும் வெளிநாட்டுக்கு அனுப்பப்படவிருந்த ரூ. 11 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் ஐந்து பேர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் தஞ்சாவூரையும், 2 பேர் புதுக்கோட்டையையும் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் விருத்தாச்சலம் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொருவரிடமும் ரூ. 1 லட்சம் பணத்தை வேணுகோபால் கொடுத்துள்ளார். இந்தப் பணம் 2 கவர்களில் தலா ரூ. 50,000 என பிரித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கவர்களை சிங்கப்பூர் போகும் வரை பிரிக்கக் கூடாது என்றும், அங்கு விமான நிலையத்தில் ஒருவர் வந்து இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்வார் எனவும் அந்த 11 பேரிடமும் வேணுகோபால் தெரிவித்திருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அனுமதி இல்லாமல் பணத்தைக் கொண்டு சென்ற குற்றத்திற்காக 11 பேருக்கும் தலா ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தப் பணத்தை 2 நாட்களில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.