வருகிறது வட கிழக்கு பருவ மழை
சென்னை:
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை நாளை அல்லது நாளை மறுதினம் தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மொத்த மழைப் பொழிவில் 48 சதவீதம் வட கிழக்குப் பருவ மழை மூலம்தான் கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்கும்.
ஆண்டுதோறும் அக்டோபர் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வட கிழக்குப் பருவ மழை நீடிக்கும்.
வழக்காக அக்டோபர் 20ம் தேதி மழை தொடங்கும். இந்த ஆண்டு ஓரிரு நாட்கள் தாமதமாக நாளை அல்லது நாளை மறுநாள் பருவ மழை தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பிராந்திய புயல் எச்சரிக்கை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு ஓரிரு நாள் தாமதமாக தொடங்குகிறது.
இருப்பினும் இந்த ஆண்டு அதிக மழை இருக்கும். பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார் ரமணன்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறியாக கடந்த 2 நாட்களாக சென்னை நகரில் மேகமூட்டமாக உள்ளது. இரவில் மழை பெய்கிறது. இன்று காலை முதல் சென்னையில் பரவலாக லேசான தூறல் மழை காணப்பட்டது. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
வழக்கமாக வட கிழக்குப் பருவ மழை மூலம் தமிழகத்திற்கு சராசரியாக 450 மில்லிமீட்டருக்கு மேல் மழை கிடைக்கும். இதில் கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து முறை மட்டுமே வழக்கமான மழை அல்லது கூடுதல் மழை பெய்துள்ளது. மற்ற ஆண்டுளில் பற்றாக்குறை மழைதான் பதிவாகியுள்ளது.
அதிக அளவாக கடந்த 2005ம் ஆண்டு இயல்பை விட (432 மில்லிமீட்டர்) கூடுதலாக அதாவது 773 மில்லிமீட்டர் மழை பெய்து தமிழகத்தையே உலுக்கியது நினைவிருக்கலாம்.
கடந்த ஆண்டு வழக்கமான மழைப் பொலிவை விட (432 மில்லிமீட்டர்) 15 சதவீதம் அதிகமான மழையே காணப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி பருவ மழை தொடங்கியது. இந்த ஆண்டு ஓரிரு நாட்கள் மழை தாமதமாக தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.