பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு உலகப் பெரும் தமிழர் விருது
திருப்பூர்:
உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பாக வரும் 28ம் தேதி திருப்பூரில் நடக்கவுள்ள மாநாட்டில் தொழிலதிபர், கல்வியாளர், அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு உலகப் பெரும் தமிழர் விருது வழங்கப்படுவதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் 5வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தமிழர் தொழில் வணிக சிறப்பு மாநாடு ஆகியவை வரும் 28ம் தேதி திருப்பூரில் உள்ள ஆர்.வி.குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைக்கிறார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை உரை நிகழ்த்துகிறார்.
இது தவிர தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு சுதேசி குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பொடாரன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாலையில் நடக்கவிருக்கும் உலக பெருந் தமிழர் விருது வழங்கும் விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த மாநாடு குறித்து பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது,
உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் தலையாய நோக்கம் ஆகும்.
ஒவ்வொரு நாட்டிலும் வாழக்கூடிய தமிழ் தொழில் வர்த்தகர்களுக்கு வெவ்வேறு வகையான பிரச்சனைகளைகள் உள்ளது. இது குறித்து விவாதித்து தீர நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
வருடம் தோறும் உலக தமிழர் பேரமைப்பு மாநாட்டில் உலக பெரும் தமிழர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த தொழில், கல்வி, தமிழ் தொண்டு ஆகியவற்றில் சாதனை புரிந்த அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு விருது வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.