கிட்னி மோசடி- போலி டாக்டர் கைது
சென்னை:
கிட்னி மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த போலி டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் சிறுநீரக மோசடி தொடர்பாக பிரபல டாக்டர் ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்த போலீசார், சென்னையில் உள்ள 3 பிரபல மருத்துவமனைகளின் ஆபரேஷன் தியேட்டர்களுக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் இந்த மோசடியில் தொடர்புடைய சென்னை வடபழனியைச் சேர்ந்த போலி டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த உமாவின் கணவர் பழனி(36). ரிக்ஷா தொழிலாளியான இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், கிட்னி புரோக்கர் பாட்சா மூலம் தன் சிறுநீரகத்தை விற்க முடிவு செய்துள்ளார் உமா. ரூ. 2 லட்சம் பணம் தருவதாக சொன்னவர்கள் கிட்னியை எடுத்த பின்னர் 60,000 ரூபாயை மட்டும் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமீபத்தில் சென்னை காவல்துறை ஆணையரிடம், உமா புகார் கொடுத்தார். தனது புகாரில் வடபழனியில் அருண் பாலி கிளினிக்கை நடத்திவரும் ரமேஷ் என்பவர் மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து ரமேஷை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒரு போலி டாக்டர் என்று தெரிய வந்துள்ளது. ரமேஷ் மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையைச் சேர்ந்தவர். அவர் டாக்டருக்கே படிக்கவில்லையாம். டாக்டர் என்று சொல்லிக்கொண்டு வட பழனியில் பல வருடங்களுக்கு முன்பு இந்த கிளினிக்கை துவக்கியுள்ளார்.
சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக இவரை சந்தித்துள்ளார். அந்த நேரத்தில் கிட்னி புரோக்கர் பாட்சா மூலமாக உமா சிறுநீரகம் கொடுக்க சம்மதம் தெரிவித்ததால் அவருக்கு ரூ.60,000 மட்டும் தான் கொடுத்துள்ளனர். மீதப்பணத்தை பின்பு தருவதாக சொல்லி தராமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
போலி டாக்டர் ரமேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.