ஆட்சிக்கு வந்தால் ராமரை பாஜக மறப்பது ஏன்?-கனிமொழி
தூத்துக்குடி:
ஆட்சி பொறுப்புக்கு வந்து விட்டால் ராமரை பாஜக மறந்து விடுவது ஏன் என திமுக ராஜ்யசபா எம்.பியான கனிமொழி கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது,
சேது சமுத்திர திட்டம் நிச்சயமாக நிறைவேறப் போகிற திட்டம். அந்த திட்டம் நிறைவேறுவதற்கு முதற்கட்டமாக இந்த கருத்தரங்கு நடக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களை 2 வகையாக எடுத்துக் கொள்ளலாம். ஒன்று அறிவுப் பூர்வமான கேள்விகளை கேட்பவர்கள். 2வது வகையினரைப் பற்றி உங்களுக்கே தெரியும். இதில் முதலாவது எதிர்ப்புக்கு நாம் பதிலளிக்க முடியும்.
பொருளாதார நன்மைகள், சுற்றுச்சூழல் குறித்து அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடை தேடலாம். இந்த திட்டம் பல்வேறு அமைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 10 நிறுவனங்களின் அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகள் அறிவுரை வழங்கிய பின்னர் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ராமர் பாலத்தை இடிப்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வரவில்லை. திமுகவுக்கோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளுக்கோ அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நிறைவேற்றப்படும் திட்டமும் அல்ல இது. மக்கள் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்.
கடந்த பாஜக ஆட்சியில் தான் சேது சமுத்திர திட்டத்துக்கு கையெழுத்து போடப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால், ராமரின் பெயரால் கட்சியை வளர்த்து கொண்டிருக்கும் நீங்கள் ஏன் அப்போது ராமரை மறந்து விட்டீர்கள். ஆட்சி பொறுப்புக்கு வந்து விட்டால் ராமரை மறந்து விடுவீர்களா?
இந்த கால்வாயில் பெரிய கப்பல் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்புகிறார்கள். இது நியாயமான சந்தேகம். உலகில் 2 சதவீத கப்பல்கள் மட்டுமே அதிக எடையுள்ள கப்பல்களாக உள்ளன. மீதமுள்ள 98 சதவீத கப்பல்கள் செல்ல என்ன தேவையோ அதனை முதலில் நிறைவேற்ற வேண்டும்.
இந்த கால்வாயில் செல்லும் போது வேகம் குறையும். இதனால் எரிபொருள் செலவு அதிகமாகும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த திட்டம் நிறைவேறுவதால் பயண தூரம் வெகுவாக குறையும். இதனால் அதிக அளவிலான எரிபொருள் சேமிக்கப்படும். இதுபோன்ற கேள்விகளை முன் வைத்தால் பதில் அளிக்க முடியும் என்றார் கனிமொழி.