ஓட ஓட விரட்டி கான்ட்ராக்டர் படுகொலை
களக்காடு (திருநெல்வேலி): நெல்லை மாவட்டம் களக்காட்டில் சினிமாவில் வருவது போல் கான்ட்ராக்டர் ஓட ஓட விரட்டி அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையைச் சேர்ந்தவர் ஞானசேகர். பஞ்சாயத்து பணிகள், கட்டடங்கள் கட்டுவதை சப்-கன்ட்ராக்ட் எடுத்து நடத்தி வந்தார்.
நேற்று காலை இவர் தொழில் விசயமாக மஞ்சுவிளையில் இருந்து களக்காட்டிற்கு பஸ்சில் வந்தார். களக்காடு அண்ணாசிலை பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும் அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஞானசேகர் சுதாரிப்பதற்குள் அக்கும்பல் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஞானசேகரை தாக்க துவங்கினர்.
அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஞானசேகர் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று அவரை சராமரியாக தாக்கியது. அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
ரோட்டில் ஒருவரை, ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியதை கண்ட பொதுமக்களும், பஸ் ஏற நின்றிருந்த பயணிகளும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
தகவல் அறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஞானசேகரை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.