விஸ்வநாதன் ஆனந்திற்கு கருணாநிதி ரூ. 25 லட்சம் பரிசு
சென்னை: செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி ரூ. 25 லட்சம் பரிசு வழங்கினார்.
சமீபத்தில் மெக்சிகோவில் நடந்த போட்டியில் ஆனந்த் இரண்டாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த சாதனையைப் பாராட்டி விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் கருணாநிதி தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந் நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தனது மனைவி அருணாவுடன் ஆனந்த் வந்தார். அவருக்கு முதல்வர் கருணாநிதி ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை வழங்கி வாழ்த்தினார்.
அப்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, மைதீன்கான், சுரேஷ் ராஜன், சாமி, மதிவாணன் ஆகியோரும் தலைமைச் செயலாளர் திரிபாதி, உள்துறைச் செயலாளர் மாலதி, நிதித் துறைச் செயலாளர் ஞானதேசிகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர் ராமன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களிடம் ஆனந்த் பேசுகையில்,
1990, 2000ம் ஆண்டுகளிலும் முதல்வர் கருணாநிதி என்னை அழைத்து பெருமைப்படுத்தினார். தற்போது 3வது முறையாக எனக்கு வாழ்த்தும் பரிசும் வழங்கி கெளரவித்த அவருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கிராமப்புறங்களில் செஸ் விளையாட்டை மேம்படுத்த தமிழக அரசு திட்டம் தயாரித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் என்னிடம் சில யோசனைகள் கேட்டார். அவரிடம் எனது கருத்துக்களை தெரிவித்தேன் என்றார்.
விசுவநாதன் ஆனந்த் 2000ம் ஆண்டில் ஈரானில் நடந்த செஸ் போட்டியில் முதன் முதலாக உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அவரது வெற்றியைப் பாராட்டி தமிழக அரசு விழா நடத்தி, சென்னை கோயம்பேட்டிலுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டி கிராமத்தில் பிளாட் ஒன்றை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.