வீட்டுக்கு லேட்டாக வந்த சித்தியை தாக்கிய மகன் கைது!
நாகை: வெளியில் போய் விட்டு இரவு நெடு நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சித்தியைத் தாக்கிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி திருமகள் மெயின் ரோட்டில் வசிப்பவர் ஜீவா. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவது மனைவி சசிகலாவுடன் வசித்து வருகிறார்.
முதல் மனைவியின் மகன் செந்தமிழ் செல்வனும் இவர்களுடன் வசித்து வருகிறார். நேற்று உறவினரை பார்க்க வெளியே சென்றார் சசிகலா. அதன் பின்னர் இரவு நெடு நேரம் கழித்து வீடு திரும்பியுள்ளார்.
இதை செந்தமிழ் செல்வன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றி செந்தமிழ் செல்வன் சித்தி சசிகலாவை தாக்கியுள்ளார்.
இதில் சசிகலா படுகாயமடைந்தார். அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சசிகலா செய்த புகாரின் பேரில் செந்தமிழ் செல்வனை திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.