ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல முடியாது-பாலு
சென்னை: சேது சமுத்திர திட்டப் பணிகள் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சேது சமுத்திர திட்டப் பணிகளை அடுத்த ஆண்டு நவம்பரில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதைப் பொறுத்தே திட்டப் பணிகள் நிறைவேறும்.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்க தாமதமானால் திட்டம் நிறைவேறுவதிலும் தாமதம் ஏற்படலாம். நீதிமன்றம் அனுமதித்தால் வரும் 2008 நவம்பரில் நான் பணியை முடித்துக் காட்டுவேன்.
இத் திட்டத்தில் 75 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறைவேற்றும் தேசிய திட்டங்களுக்கு எதிராக சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.
அவர்கள் எண்ணம் பலிக்காது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டம் என்பதால் பணத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இத் திட்டத்துக்கு நிதி தருவதை ஆக்சிஸ் வங்கி நிறுத்திவிட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை. இது குறித்து ஜெயலலிதாவின் கருத்துக்களுக்கு எல்லாம் நான்
பதில் சொல்ல விரும்பவில்லை.
அவர் ரொம்பப் பெரியவர். நான் ரொம்ப சிறியவன்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும், முதல்வர் கருணாநிதியும் தொடங்கி
வைத்த இந்த திட்டம் நிச்சயம் நிறைவேறும். இதுவரை இத் திட்டத்திற்காக ரூ. 600 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தடையால் ஆடம் பாலம் பகுதியில் மட்டுமே தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமலாக்கப்பட்டு வரும் புதிய நெடுஞ்சாலைப் பணிகள் அனைத்தும் 2008க்குள் முடிவடையும். மொத்தம் 80 பைபாஸ் சாலைகள், 303 மேம்பாலங்கள், 66 பெரிய பாலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கத்திபாரா சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் மார்ச் மாதம் திறக்கப்பட்டுவிடும் என்றார் பாலு.