For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை சிறையில் நாஞ்சில் சம்பத் மீது திமுகவினர் தாக்குதல்?

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை, தினகரன் அலுவலக தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த அட்டாக் பாண்டி உள்ளிட்ட திமுகவினரும், ரவுடிகளும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதனால் சம்பத்தை திருச்சி சிறைக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து சம்பத் திருச்சிக்கு மாற்றப்பட்டு விட்டார்.

தேனி மாவட்டம் வத்தலகுண்டுவில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தின்போது திமுகவினர் புகுந்து ரகளை செய்தனர். மதிமுகவினரை சரமாரியாகத் தாக்கினர்.

இந்த நிலையில் திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் முதல்வர் கருணாநிதயை அவதூறாகப் பேசியதாக நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மதுரை சிறையில், நாஞ்சில் சம்பத்தை திமுகவினர் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. தினகரன் அலுவலகம் மீதான வெறித் தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அட்டாக் பாண்டி உள்ளிட்ட திமுகவினரும், சில சமூக விரோதிகளும் சேர்ந்து சம்பத்தைத் தாக்கியதாக தெரிகிறது.

இந்தத் தகவல் சம்பத்தை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறையில் பார்த்து விட்டு திருப்பூருக்குத் திரும்பியபோது நடந்துள்ளது. இந்தத் தகவல் அறிந்ததும் திருப்பூர் பயணத்தை ரத்து செய்த வைகோ, மீண்டும் மதுரை திரும்பினார்.

பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அவர்களிடம் வைகோ பேசுகையில், உன்னை உயிரோடு விட மாட்டோம் என்று கூறி சம்பத்தைத் தாக்கியுள்ளனர்.

கன்னம், தோள்பட்டை, இடுப்பு என சரமாரியாக தாக்கியுள்ளனர். அடித்ததோடு இல்லாமல் கீழே தள்ளி மிதித்தும் உள்ளனர்.

அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வெறித் தாக்குதல் நடந்துள்ளது. தினகரன் அலுவலக கொலை வழக்கில் குற்றவாளிகளாக உள்ள திமுகவினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆளுநர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, சிறைத்துறை தலைவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளோம்.

சம்பத்தைக் கைது செய்த அதே வத்தலகுண்டில் வருகிற நவம்பர் 13ம் தேதி நான் பொதுக் கூட்டத்தில் பேசப் ேபாகிறேன். அதை முடிந்தால் தடுக்கட்டும். தடுக்கும் இடங்களில் எல்லாம் கூட்டத்தை நடத்தியே தீருவோம் என்றார் வைகோ.

இதற்கிடையே சம்பத் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் மோகன்தாஸை சந்தித்து மதிமுக வக்கீல்கள் புகார் கூறி மனு கொடுத்தனர். இதுகுறித்து நீதிபதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பழனிவேலு ஆகியோர் முன் மதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசுத் தரப்பு வக்கீல் தீயாகராஜனிடம், நாஞ்சில் சம்பத்தை தொடர்ந்து மதுரை சிறையில் வைத்திருப்பது நிலைமையை மோசமாக்கும். எனவே அவரை வேறு சிறைக்கு மாற்றுவது நல்லது என்று அறிவுறுத்தினார்.

இதையடுத்து சிறைக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜனை பதிவாளர் மோகன்தாஸ் நேரில் வரவழைத்து நடந்தது குறித்து விசாரித்தார். பின்னர் திருச்சி சிறைக்கு சம்பத்தை மாற்ற முடிவானது. அதன்படி நேற்று இரவு 10 மணியளவில் மதுரை சிறையிலிருந்து சம்பத் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.

சம்பத்தை தாக்கியதாக கூறப்படும் அட்டாக் பாண்டி அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X