சுனாமிக் குடியிருப்பில் நாய் கடித்து 3 பெண்கள் பலி
கடலூர்: கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கிராமத்தில், வெறிநாய் கடித்து 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேவனாம்பட்டனம் பகுதியில் உள்ள சுனாமி பாதிக்கப்பட்டோருக்கான குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் கண்ணகி (58), குமுதம் (44), சாந்தி (40).
இவர்களை 15 நாட்களுக்கு முன்பு ஒரு வெறி நாய் கடித்தது. இதையடுத்து மூன்று பேரும் ரேபிஸால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் 3 பேரும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களது நிலைமை மோசமாகி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் சரியான முறையில் டாக்டர்கள் சிகிச்சை தராமல் அலட்சியமாக நடந்து கொண்டதால்தான் 3 பேரின் நிலைமையும் மோசமாகி அவர்கள் உயிரிழக்கக் காரணம் என கிராமத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
3 பெண்களையும் கடித்த நாய் எங்கு போனது என்று தெரியவில்லை. கிராமத்தினர் அந்த நாயை பல இடங்களிலும் தேடியும் கூட அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சுனாமிக் குடியிருப்புப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.