தூத்துக்குடியில் நள்ளிரவில் மீனவர்கள் திடீர் மறியல்
தூத்துக்குடி: மீன்பிடி உபகரணங்கள் வழங்கக்கோரி தூத்துக்குடியில் நள்ளிரவில் மீனவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே சுனாமி குடியிருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில் சுனாமியின் போது மிகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 2ம் கட்டமாக மீன்பிடி வலைகள், காஸ் லைட்டர், சைக்கிள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.
அதன்படி தூத்துக்குடியில் உள்ள மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்களுக்கு மாலையில் உபகரணங்கள் வழங்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டது. ஆனால் டோக்கன் பெற்ற எவருக்கும் உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே டோக்கன் கிடைக்காதவர்கள் தங்களுக்கும் டோக்கன் வழங்ககோரி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள கடற்கரை சாலையில் திடீரென்று அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மீனவர்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.