உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆனார் முகேஷ் அம்பானி
மும்பை: மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ், வாரன் பபெட் உள்ளிட்ட உலக மகா கோடீஸ்வரர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி.
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இதுவரை இந்தியர்கள் யாரும் முதலிடத்தைப் பிடித்ததில்லை. அமெரிக்கர்களே தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தனர்.
ஆனால் முதல் முறையாக முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்து பெரும் சாதனை படைத்துள்ளார்.
இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட அபரிமிதமான ஏற்றத்தின் காரணமாக அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு எட்ட முடியாத உயரத்திற்குச் சென்று விட்டது.
நேற்று மும்பை பங்குச் சந்தை 20,000 புள்ளிகளை எட்டியது. இதனால் பங்குகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தன. இதில் அம்பானி சகோதரர்களின் பங்குகள் பெரும் விலையை எட்டின. இதன் மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
இதன் விளைவாக பில் கேட்ஸ், வாரன் பப்பெட், மெக்சிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் ஹெலு ஆகியோரை பின்னுக்குத் தள்ளி விட்டு முகேஷ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் பெட்ரோலியம் அண்ட் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்பிராஸ்டிரக்சர் லிமிட்டெட் ஆகியவற்றின் சொத்து மதிப்பு 63.2 பில்லியன் டாலராக அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,49,108 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பில் கேட்ஸும், அதற்கு அடுத்த இடத்தில் இருந்த கார்லோஸையும் முகேஷ் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
தற்போது முகேஷுக்கும், பில் கேட்ஸுக்கும் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் ரூ. 15,000 கோடியாகும்.
2வது இடத்தில் இருந்த கார்லோஸ் தற்போது 3வது இடத்திற்கும், 3வது இடத்தில் இருந்த வாரன் பப்பெட் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடியாகும்.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 37 ஆயிரத்து 500 கோடியாகும். ரிலையன்ஸ் அடிப்படைக் கட்டமைப்பு நிறுவனத்தின் மதிப்பு ரூ. 2,100 கோடியாகும்.
கடந்த செப்டம்பர் 26ம் தேதி இந்தியாவின் லட்சுமி மிட்டலை முகேஷ் அம்பானி முந்தினார். உலகின் பணக்கார இந்தியர் என்ற பெருமையை அப்போது அவர் பெற்றார். மிட்டல் உலகின் 5வது பெரும் பணக்காரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.