சென்னையில் 540 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்-ஒருவர் கைது
சென்னை: சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு கடத்தப்படவிருந்த 500க்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாபுரம் மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்தவர் அபுதாலி (35). இவர் நேற்றிரவு மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூர் செல்ல சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்ட போது அவர் கொண்டுவந்த பைக்குள் ஏதோ நகர்வது போல் இருந்தது. உடனே அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று அவரின் பையை திறந்த பார்த்தனர்.
அதில் 540 நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் அந்த ஆமைகளை பறிமுதல் செய்து அபுதாலியை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.4.5 லட்சம் ஆகும்.
கடந்த ஒரு வாரத்திற்குள் நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்தவது இது 2 வது முறையாகும்.
கடந்த 27ம் தேதி இதேபோன்று கோலாலம்பூர் செல்ல முயன்ற ஒரு பயணியிடம் இருந்து 557 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மலேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நட்சத்திர ஆமைகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. மருத்துவப் பயன்பாட்டுக்கு அங்கு நட்சத்திர ஆமைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சென்னையிலிருந்து இந்த நாடுகளுக்கு அதிக அளவில் நட்சத்திர ஆமைகளை கடத்தும் செயல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.