சத்துணவு சாப்பிட்ட 184 மாணவர்கள் மயக்கம்
திருச்சி: திருச்சியில், சத்துணவு சாப்பிட்ட 184 பேர் மயக்கமடைந்தனர். உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருச்சி, பெருங்கொண்டை என்ற இடத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறப்பட்டது. சாப்பாட்டை முடித்த பின்னர் 184 மாணவர்கள் மயக்கமடைந்தனர். சிலருக்கு வாந்தியும் ஏற்பட்டது.
இதையடுத்து அனைவரையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு 23 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்ப டாக்டர்கள் அனுமதித்தனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 23 பேரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனைக்குச் சென்று மாணவர்களிடம் நலம் விசாரித்தார்.
உணவு சமைப்பதில் அஜாக்கிரதையாக இருந்ததாக சத்துணவு ஊழியர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டார்.