மு.க.ஸ்டாலின் திடீர் பாங்காக் பயணம்
சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம். அண்ணா பன்னாட்டு முனையம். செவ்வாய்க்கிழமை இரவு. பல்வேறு நாடுகளுக்கும் பயணிக்க வந்திருந்த பயணிகளின் கூட்டத்தால் பன்னாட்டு முனையம் நெரிசலாக காணப்பட்டது.
அப்போது அங்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் யாரும் இன்றி, தனது நண்பர் ராமஜெயம் ராஜா சங்கர் என்பவருடன் மட்டும் அங்கு வந்தார். ஆள் அரவமின்றி ஸ்டாலின் வந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்களுக்கு வியப்பு.
விறுவிறுவென வந்த ஸ்டாலின், பாங்காக் செல்லும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் புறப்பட்டுச் சென்று விட்டார்.
ஸ்டாலின் தாய்லாந்து சென்றது கட்சியினருக்கே கூடத் தெரியாதாம். கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் பலருக்கும் கூட இது தெரியாதாம்.
முதல்வர் கருணாநிதியும், மூத்த மகன் மு.க.அழகிரியும் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் தேவர் ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த நிலையில், ஸ்டாலின் பாங்காக் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலைதான் ஸ்டாலின் நெல்லையில் நடக்கவுள்ள இளைஞர் அணி மாநாடு குறித்து கட்சியின் 2ம் மட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சில மணி நேரங்களில் அவர் பாங்காக் புறப்பட்டுச் சென்று விட்டார்.
திங்கள்கிழமைதான் ஸ்டாலின் பாங்காக் செல்வதற்கான டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஸ்டாலின் அலுவலகத்தில் விசாரித்தபோது, முதலில் ஸ்டாலினுக்கு உடல் நலமில்லை, இதனால் அவர் ஓய்வுக்காக அவர் பாங்காக் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஸ்டாலினின் பி.ஏ.க்களில் ஒருவரிடம் கேட்டபோது, தனிப்பட்ட வேலைகளுக்காக ஸ்டாலின் சென்றுள்ளார் என்று உறுதிப்படுத்தினார்.
தலைமைச் செயலக வட்டாரத்திலும், ஸ்டாலின் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பாங்காக் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், வேறு ஒரு காரணமும் ஸ்டாலின் பயணத்திற்குக் காரணமாக கூறப்படுகிறது. கனிமொழியை மத்திய அமைச்சராக்க முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகவும், அதை ஸ்டாலின் விரும்பவில்லை. அந்த அப்செட்டில்தான் அவர் பாங்காக் புறப்பட்டுப் போயுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை, அந்தப் பொறுப்பிலிருந்து முதல்வர் மாற்றியதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும், அழகிரியின் கோரிக்கையை ஏற்று ராமச்சந்திரன் மாற்றப்பட்டது அவரை அப்செட் செய்து விட்டதாகவும் இன்னொரு அரசியல் ரீதியிலான காரணம் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தனது பேரனுடன் ஸ்டாலின் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து முதுகில் அடிபட்டது. அதற்காக அவர் மருத்துவமனையில் தங்கி ஓய்வும் எடுத்தார்.
இதுதொடர்பாக சிகிச்சை பெறக் கூட ஸ்டாலின் பாங்காக் சென்றிருக்கலாம் எனவும் ஒரு பேச்சு நிலவுகிறது.
பாங்காக் சென்றுள்ள ஸ்டாலின், 3ம் தேதி சென்னை திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.