தீவிரவாதிகள் பிடியிலிருந்து மீண்டு ஊர் திரும்பிய 3 தமிழர்கள்
வடக்கன்குளம்: நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த 3 தமிழர்களும் நேற்று இரவு சொந்த ஊர் திரும்பினர்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த வினோத், மோகன்தாஸ் மற்றும் அஜீத் காமராஜ். இவர்கள் மூன்று பேரும் நைஜீரியாவில் உள்ள இத்தாலி நாட்டு எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் உள்பட 10 தொழிலாளர்கள் நடுக் கடலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த தீவிரவாதிகள் தமிழர்கள் 3 பேர் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேரைக் கடத்திச் சென்றனர்.
அவர்களை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 200 கோடி தர வேண்டும் என்றும் மிரட்டினர். இதையடுத்து இத்தாலி நிறுவனம், தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்திய அரசுத் தரப்பிலும் இந்தியர்கள் நால்வரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு இத்தாலி நிறுவனம் ரூ. 28 கோடி பணம் கொடுத்ததாக கூறப்பட்டது. இதனால் அவர்கள் கடத்திச் சென்ற 6 பேரையும் விடுவித்தனர்.
தீவிரவாதிகள் பிடியிலிருந்த மீண்ட மூன்று தமிழர்களும் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி தாங்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் நைஜீரியாவிலிருந்து துபாய் வழியாக திருவனந்தபுரம் வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உணர்ச்சிப்பெருக்குடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து வடக்கன்குளத்திற்கு மூன்று பேரும் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை ஊர் மக்கள் ஒன்று திரண்டு பட்டாசுகள் வெடிக்க, உற்சாகமாக வரவேற்றனர்.
3 பேரையும் அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். பிறகு அவர்கள் கூறுகையில், தங்களைத் தீவிரவாதிகள் எந்த சித்திரவதையும் செய்யவில்லை என்றும், தாங்கள் வேலை பார்த்து வரும் இத்தாலி நிறுவனம் பணம் கொடுத்து தங்களை மீட்டதாகவும் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் வந்தனர், அங்கிருந்து சொந்த ஊர் திரும்பினர், சித்திரவதை செய்யவில்லை, நிறுவனம் பணம் கொடுத்து தங்களை மீட்டதாக தெரிவித்தனர்.