அமெரிக்காவில் கத்தியுடன் 2 இந்தியர்கள் கைது
நியூயார்க்: அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து மும்பை கிளம்பவிருந்த விமானத்தில் கத்திகளுடன் வந்த 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யபப்ட்டவர்களில் ஒருவரது பெயர் சகன்பாய் படேல் (60), இன்னொருவரின் பெயர் சங்கரபாய் படேல் (64).
இருவரும் அட்லாண்டாவிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் பயணிக்க வந்தனர். விமான நிலையத்தில் சகன்பாய் படேல் வைத்திருந்த பையை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் மடக்கக் கூடிய வகையிலான கத்தி, ரேசர் பிளேடுகள், 20 சிறு கத்திகள் இருந்தன. இவற்றை ஒரு பொம்மை காரின் பேட்டரி வைக்கும் பகுதியில் அவர் வைத்திருந்தார்.
இதையடுத்து போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எப்.பி.ஐ அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது சங்கரபாய் படேலிடமும் இதுபோல உள்ளதாக சகன்பாய் தெரிவித்தார்.
அப்போது சங்கரபாய் படேல் விமானத்தில் அமர்ந்திருந்தார். இதையடுத்து அவரை கீழே இறக்கி அவரது பையை போலீஸார் சோதனையிட்டனர். அவரது பையில் ஒரு பாக்ஸ் கட்டர் மற்றும் 5000 அமெரிக்க டாலர் பணம் இருந்தது.
இருவரும் நியூயார்க்கிலிருந்து மும்பை செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
இருவரிடமும் விசாரணை நடத்திய எப்.பி.ஐ. அதிகாரிகள் இருவரும் இதை எந்த உள்நோக்கத்துடனும் கொண்டு வரவில்லை என்றும், தீவிரவாத செயல் எதுவும் இதில் இல்லை என்றும் விளக்கினர். அதேசமயம், இருவரின் விசாவும் ஏற்கனவே முடிந்து விட்டது. எனவே இருவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்த எப்.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த விமானம் ஐந்து மணி நேரம் தாமதப்பட்டது.