ஆஜ்மீர் தர்ஹாவுக்குள் புகுந்த 3 பாகிஸ்தானியர்கள் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள பிரபல காஜா மொய்னுதீன் தர்ஹாவுக்குள் நுழைய முயன்ற 3 பாகிஸ்தான் நாட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
மூன்று பேரும் முறையான அனுமதி இல்லாமல் தர்ஹாவுக்கு வந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டு வர்த்தகர் ஆவார். 3 பேரும் இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆஜ்மீருக்குள் வர அவர்கள் முறையான அனுமதியைப் பெறவில்லை என்று கூடுதல் எஸ்.பி. கஜானந்த் வர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி, மும்பை, கோவா, சிம்லா, ராஜஸ்தான் மாநிலம் பிவாடி ஆகிய ஊர்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். இங்கு மட்டுமே செல்ல அவர்கள் விசாவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வேறு எங்கும் செல்ல அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் விசா விதி மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் விரைவில் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
கடந்த அக்டோபர் 11ம் தேதி ஆஜ்மீர் தர்ஹாவில் குண்டுவெடிப்பு நடந்து 2 பேர் பலியானார்கள். இதையடுத்து ஆஜ்மீரில் போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.