கமலா அம்மாள் உடல் தகனம்: திரையுலகம் இறுதி அஞ்சலி
சென்னை: மறைந்த நடிகர் சிலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கமலா அம்மாள் நேற்று முன்தினம் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சிவாஜி ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
சிவாஜிகணேசன், கமலா அம்மாள் தம்பதியினரின் மகள்களான சாந்தி மற்றும் தேன்மொழி இருவரும் வெளிநாட்டில் இருந்ததால் அவர்கள் வரும் வரை இறுதிச் சடங்குகள் தள்ளிப் போடப்பட்டு இன்று உடல் தகனம் நடந்தது.
நேற்று சாந்தி வந்து சேர்ந்தார். தேன்மொழி இன்று அதிகாலை சென்னைக்கு வந்து சேர்ந்தார். இரு மகள்களும் தாயாரின் உடலைப் பார்த்து கதறி அழுதது நெஞ்சை உறுக்குவதாக இருந்தது.
இன்று காலை இறுதிச் சடங்கு நடந்தது. ஆம்புலன்ஸ் வேனில் கமலா அம்மாளின் உடல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இறுதிச் சடங்கில் நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயக்குமார், சத்யராஜ், ராஜேஷ், நெப்போலியன், பாஜக மாநில தலைவர் இல.கணேசன், கராத்தே தியாகராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கமலா அம்மாளின் உடல் மின் தகன மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.