தமிழ்ச்செல்வனுக்கு தமிழக கட்சிகள் இரங்கல்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளன.
பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டுள்ளது உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமைதி, மனித உரிமை, ஜனநாயகம் ஆகியவற்றின் நம்பிக்கை கொண்டுள்ளவர்களையும் இது அதிர வைத்துள்ளது.
இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இந்தியா இனியும் அமைதி காத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழர்கள் அங்கு படும் அவஸ்தைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வ காண முன்வர வேண்டும் என இலங்கை அரசை வவலியுறுத்த வேண்டும்.
ஆறரை கோடி தமிழகத் தமிழர்களின் சார்பில் முதல்வர் கருணாநிதி, மத்திய அரசின் கவனத்திற்கை இதைக் கொண்டு செல்ல வேண்டும். ஈழத் தமிழர் துயர் துடைக்க உதவ வேண்டும். இதுதொடர்பாக முதல்வருக்கு நான் கடிதமும் எழுதவுள்ளேன்.
தமிழ்ச் செல்வனின் மறைவின் மூலம், நார்வே தூதுக் குழுவின் பேச்சுவார்த்தைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. சுமூகத் தீர்வு ஏற்படுவதற்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
மேலும் அமைதிப் பேச்சில் இலங்கை அரசுக்கு சற்றும் அக்கறை இல்லை என்பதை இது காட்டுகிறது. ஈழத் தமிழர்களுக்கு தமிழ்ச்செல்வனின் மரணம் பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
நெல்லையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், ரசிகமணி டி.கே.சி குறித்து எழுதிய அன்னப்பறவை என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைகோ தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், இலங்கையில் ஜெனிவா உடன்படிக்கையின்படி தம்மிடம் பிடிபட்ட சிங்கள ராணுவ வீரர்களை தகுந்த மரியாதையுடன் விடுதலைப்புலிகள் நடத்துகின்றனர். ஆனால் அனுராதாபுரத்தில் நடந்த தாக்குதலில் இறந்த 21 பேரின் சடலங்களை நிர்வாணமாக வைத்து சிங்கள ராணுவத்தினர் கூத்தாடி உள்ளனர்.
சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு தமிழும், தமிழர்களும் இருக்கும் இடத்தில் எல்லாம் அவருடைய புகழ் பாடப்படும் என்றார்.
கரூரில் இரங்கல் கூட்டம்:
தமிழ்செல்வன் மறைவுக்கு கரூரில் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூர் காமராஜர் சிலை அருகில் மதிமுக, தமிழர் தேசிய இயக்கம், பெரியார் தி.க, திராவிடர் கழகம், உலகத் தமிழ் பேரவை, தமிழ் சான்றோர் அமைப்பு, விடுதலை சிறுத்தைகள் போன்ற இயக்கங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மதிமுக அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சீனிவசா பெருமாள் தலைமை தாங்கினார். மதிமுக கரூர் நகர செயலாளர் பா.கி . தங்கராசு, பாமக முன்னாள் மாநில செயலாளர் குணசேகரன், திக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில் சுப.தமிழ்செல்வன் படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர். கூட்டத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட பல முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.