யு.ஏ.இ.: வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஊதியம் உயருகிறது
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை பார்க்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய விகிதத்தை உயர்த்துவது குறித்து விரிவான அறிக்கை வழங்குமாறு தொழிலாளர் துறையை, எமிரேட்ஸ் அமைச்சரவை கேட்டுக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபி எமிரேட்ஸில் வேலை பார்த்து வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சமீப காலமாக ஊதிய உயர்வு கோரியும், முறையான வீட்டு வசதி கோரியும் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
சமீபத்திலும் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். அவர்களில் சிலரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது எமிரேட்ஸ்.
இந்த நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவது குறித்து எமிரேட்ஸ் அரசு பரிசீலிக்க தொடங்கியுள்ளது.
ஊதிய உயர்வு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொழிலாளர் நலத் துறைக்கு, எமிரேட்ஸ் அமைச்சரவை நேற்று உத்தரவிட்டது.
இதுகுறித்து தொழிலாள் துறை இணைச் செயலாளர் ஹூமைத் பின் தீமாஸ் கூறுகையில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இதில் எந்தவிதமான சட்ட மீறலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
சில நிறுவனங்கள், தொழிலாளர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளன. இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக அந்த நிறுவனங்கள் கூறும் எந்தக் காரணத்தையும் ஏற்க முடியாது என்றார்.
இந்தியா வரவேற்பு:
தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து எமிரேட்ஸ் அரசு எடுத்துள்ள முடிவை இந்தியத் தூதரகம் வரவேற்றுள்ளது. இது மிகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று இந்தியத் தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துபாயில், இந்திய தூதர் வேணு ராஜாமணி கூறுகையில், இந்த ஆய்வின் முடிவினை அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எமிரேட்ஸில் வாழிட செலவுகள் அதிகரித்து விட்டன என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே இந்த சமயத்தில் இப்படிப்பட்ட முடிவை எமிரேட்ஸ் அரசு எடுத்திருப்பது மிகவும் வரவேற்புக்குரியது என்றார்.
ஊதிய உயர்வோடு, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம வசதிகள் கொண்ட குடியிருப்புத் திட்டம் குறித்தும் ஆய்வு செய்ய எமிரேட்ஸ் அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எமிரேட்ஸில் பணியாற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் சம அந்தஸ்துடன் கூடிய குடியிருப்பு வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எமிரேட்ஸ் அரசின் இந்த இரண்டு முக்கிய முடிவுகளால் அங்கு வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் பிறந்துள்ளது.