பெரியாறு அணை உடையலாம் என கேரளாவில் பீதி
இடுக்கி: ல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 137 அடியைத் தாண்டியுள்ளது. இதனால் அணை உடையும் என்ற வதந்தி கேரள மாவட்டங்களில் கிளப்பி விடப்பட்டுள்ளது.
தமிழக, கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடி அணை இது.
கேரளாவில் அணை இருந்தாலும் கூட இந்த அணையைக் கட்டியது, பராமரித்து வருவது தமிழக அரசுதான். அணையின் மொத்தக் கொள்ளளவு 152 அடியாகும். தமிழக அரசு 142 அடி வரை நீர் தேக்கி வந்தது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைத்து விட்டது கேரள அரசு.
அதற்கு மேல் தேக்கி வைத்தால் அணைக்கு ஆபத்து ஏற்படும் என வாதிட்டு 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்க அது அனுமதிப்பதில்லை.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு. தமிழக அரசின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், 142 அடி வரை தமிழகம் தண்ணீர் தேக்கலாம் என தீர்ப்பளித்தது.
ஆனால் இதை ஏற்க மறுத்த கேரள அரசு, புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை கிடப்பில் போட்டு விட்டது.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் நல்ல மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 137.9 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் அணைக்கு மேலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அணை நிரம்பி விட்டது, எந்த அபாயமும், எப்போதும் நிகழலாம் என்ற வதந்தி இடுக்கி உள்ளிட்ட பெரியாறுப் பாசனப் பகுதி கேரள மாவட்டங்களில் பரப்பி விடப்படுகிறது. மேலும் இடுக்கி மாவட்ட நிர்வாகமும், 'எந்த நிலைமையையும்' சமாளிக்கத் தயார் என அறிவித்திருப்பதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
அணை முழுமையாக நிரம்பி விட்டது போலவும், அணை உடையும் அபாயம் உருவாகியுள்ளது போலவும் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் வதந்தி பரப்பி வருவதைத் தடுக்க கேரள அரசு முயலாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.