காதல் ஜோடியைத் தாக்கி நகை பறிப்பு!
திருநெல்வேலி: இரவில் சுற்றிய காதல் ஜோடியைத் தாக்கி நகைப் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த பட்டப் படிப்பு படித்த 20 வயது இளம்பெண் ஒருவர், ஜங்ஷன் சி.என்.கிராமத்தை சேர்ந்த குமரேசன்(20) என்பவரைக் காதலித்து வருகிறார்.
குமரேசன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தீபாவளிக்காக ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இரவு 7.30 மணி அளவில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றினர். அப்பெண் தனது மொபட்டில் காதலருடன் வெளியில் சுற்றியுள்ளார்.
பாளையங்கோட்டை ஐ.ஓ.பி. காலனி பகுதியில் வந்தனர். அப்பகுதி இருளாக இருந்தது. அந்த சமயத்தில், இரு வாலிபர்கள் அவர்களை மறித்து தாக்கினர்.
இதில், குமரேசனின் கையில் ஏற்பட்டது. இருவரும் பின்னர் அந்தத் திருடர்கள், இளம் பெண் அணிந்திருந்த தலா ஒன்றரை பவுன் தங்கசெயினை பறித்ததோடு, அப்பெண்ணின் மொபட்டையும் பறித்துக் கொண்டு தப்பினர். பின்னர் சிறிது தூரத்தில் மொபட்டை போட்டு விட்டு தப்பினர்.
இந்தப் பகுதியில் இதுபோல அடிக்கடி வழிப்பறிச் சம்பவங்களும், வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடுவதும் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.