இளைஞர் காங். தலைவர் மீது தாக்குதல்: வாசன் கண்டனம்
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை மயூரா ஜெயக்குமாரை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டித் தாக்கியது. இதில் படுகாயமடைந்த ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோஷ்டி மோதல் காரணமாகவே ஜெயக்குமார் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயக்குமார் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்.
ஜெயக்குமார் தாக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் வாசன் உடனடியாக சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்து வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.
இந்த தாக்குதலின் பின்னணியில் கட்சியின் ஒரு பிரிவினரே காரணம் என்று தெரிய வந்துள்ளது. கட்சித் தலைமை அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பது வன்மையாக கண்டித்தக்கத்தக்கதாகும்.
இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
சத்தியமூர்த்தி பவனில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை. இது மிகவும் அநாகரீகமானது, கோழைத்தனமானது.
போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றார்.