செக்ஸ் புகாரில் அதிரடிப்படை எஸ்.ஐ!
சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், பெண் போலீஸாரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தர்மபுரியில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஆர்.சரவணன். இவர் வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையில் காவலராக இருந்தவர்.
வீரப்பன் வேட்டைக்குப் பின்னர் அதிரடிப்படையினருக்கு இரட்டை பதவி உயர்வும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. அந்த வகையில், சரவணன் சப் இன்ஸ்பெக்டராக உயர்வு பெற்றார். தர்மபுரியில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சரவணன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நவம்பர் 3ம் தேதி குடிபோதையில் அவர் மாவட்ட கருவூலத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய முயன்றார். அவரை அசிங்கமாக பேசித் திட்டியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் எஸ்.ஐ.யை விலக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண் காவலர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் தர்மபுரி போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் சரவணன் தவறு செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து பணி காலியிடப் பட்டியலின் கீழ் சரவணனை வைக்க எஸ்.பி. உத்தரவிட்டார்.