வைகோ, நெடுமாறனை விடுதலை செய்யக் கோரி மதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இன்று மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்து நேற்று சென்னையில் வைகோ, நெடுமாறன் தலைமையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் இதற்குப் போலீஸார் தடை விதித்திருந்தனர். ஆனால் தடையை மீறி பேரணி நடத்த முயன்றபோது, வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொருளாளர் மு.கண்ணப்பன் அறிவித்திருந்தார். அதன்படி மாவட்டத் தலைநகரங்களில் இன்று மதிமுகவினர் பெரும் திரளாக கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வைகோ, நெடுமாறனை விடுவிக்க திருமா. கோரிக்கை:
இதற்கிடையே, வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரை நிபந்தனை ஏதுமின்றி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈழ மண்ணின் விடுதலைக்காகவும், அமைதிக்காகவும் போராடி வந்த சுப.தமிழ்ச்செல்வன் கடந்த 2ம் தேதி சிங்கள இனவெறிக் கும்பலால் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட சூழலில், அவருக்கும் அவரோடு களப்பலியானோருக்கும் அஞ்சலி செலுத்துகிற வகையில் தமிழகமெங்கிலும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழ் மக்கள் அமைதி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பழ.நெடுமாறன் தலைமையில் அமைதி அணிவகுப்பு நடத்திட முடிவு செய்யப்பட்டு அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அரசு தரப்பில் அந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், தடையை மீறி அப்பேரணியில் கலந்து கொள்வதற்காக மன்றோ சிலை அருகே திரண்ட தமிழ் உணர்வாளர்களை குறிப்பாக பழ.நெடுமாறன், வைகோ, தேசிய லீக்கின் மாநிலத் தலைவர் பசீர் அகமது உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 14 பெண்கள் உட்பட 360 பேர் புழல் மையச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வாழ்விலே இல்லாவிட்டாலும் சாவிலே இருக்க வேண்டும் என்பது தமிழர் பண்பாடாகும். அந்த வகையில் ஈழ மண்ணில் வீரச்சாவடைந்த சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தமிழ்ப்போராளிகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திட இயலாது எனும் நிலையில் தமிழகத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவதும், இரங்கல் அணிவகுப்பு கூட்டங்களை நடத்துவதும் மனித நேயத்தின் அடிப்படையிலான செயல்களேயாகும்.
இத்தகையச் சூழலில் ஒருசில அரசியல் கட்சிகள், ஒருசில தலைவர்கள் மறைந்த தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்துவதே கூடாது என்றும், அவ்வாறு அஞ்சலி செலுத்துவோரை கைது செய்ய வேண்டும் என்றும் அஞ்சலி செலுத்தும் அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
அதனடிப்படையில் கடந்த 11ம் தேதி வேலூரில் நடைபெறுவதாக இருந்த வேலூர் தமிழ்ச்சங்கத்தின் இரங்கல் கூட்டமும், சென்னையில் நடைபெறவிருந்த பேரணியும் தடை செய்யப்பட்டதுடன், மதுரையில் இன்றைய தினம் நடைபெறவிருந்த விடுதலைச் சிறுத்தைகளின் இரங்கல் கூட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மனிதநேய உணர்வுகளை நசுக்குவதாக உள்ளது.
தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதைப் போல தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இயல்பாகவே அமைந்துள்ள தமிழ் இனமான உணர்வும், மனிதநேய உணர்வும் இரங்கல் கவிதையாக வெளிப்பட்டதை உலகம் அறியும்.
அத்தகைய மனித நேய உணர்வுள்ள முதல்வர் இரங்கல் ஊர்வலம் நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பழ.நெடுமாறன், வைகோ, பசீர் உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனை ஏதுமின்றி அரசு உடனடியாக விடுதை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
சுப.தமிழ்ச்செல்வன் மறைவால் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து கிடக்கும் உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டு மக்களின் இத்தகைய இரங்கல் நிகழ்வுகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் அவர்களும் சிறைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதே என்று உலகத் தமிழர்கள் வேதனைப்பட நேரிடும். எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கிடவும், அமைதியான முறையில் நடைபெறும் இரங்கல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கிடவும் வேண்டும் என்று சமத்துவப் பெரியார் கருணாநிதியை தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.