அணு சக்தி கவுன்சிலிடம் பேசலாம்: இடதுசாரிகள் திடீர் பல்டி!
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வந்த இடது சாரிக் கட்சிகளின் நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அணு சக்தி கவுன்சிலிடம் இந்தியா பேசவே கூடாது என்று கூறி வந்த இடதுசாரிகள் தற்போது பேசலாம் என பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறும் நிலை கூட உருவாகலாம் என இடதுசாரிகள் மிரட்டல் விடுத்தனர்.
மேலும், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி கவுன்சிலிடம் இந்தியா பேசக் கூடாது எனவும் நிர்ப்பந்தித்தனர். இதன் காரணமாக சர்வதேச அணு சக்தி கவுன்சிலில் இந்த விவகாரத்தை இந்தியா எழுப்பவில்லை. சமீபத்தில் டெல்லி வந்திருந்த கவுன்சில் தலைவர் எல்பராடியிடமும் இதுகுறித்து பேசவில்லை.
இடதுசாரிகளின் தொடர் நெருக்குதல் காரணமாக அணு சக்தி ஒப்பந்தத்தையே கிடப்பில் போடவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தீர்மானித்தது.
இந்த நிலையில் பெரிய யு டர்ன் போட்டு பல்டி அடித்துள்ளனர் இடதுசாரிகள். சர்வதேச அணுசக்திக் கவுன்சிலிடம் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு பேசலாம் என அவர்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
அதேசமயம், என்ன பேசப் போகிறோம் என்பதை முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதில் ஆட்சேபகரமான விஷயங்கள் இடம் பெற்றிருந்தால் அதை நீக்கும் உரிமை தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் இடதுசாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான் கூறுகையில், சர்வதேச அணு சக்திக் கவுன்சிலுடன் இந்தியா பேசுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதேசமயம், பேச்சுவார்த்தைக்கு முன்பாக எங்களுக்கு அதுகுறித்து தெரிவிக்கப்பட வேண்டும். இந்தியாவின் உரையில், எங்களுக்கு ஆட்சேபகரமான ஷரத்துகள் இடம் பெற்றிருந்தால் அதை நீக்கும் உரிமை எங்களுக்குத் தரப்பட வேண்டும்.
இதுகுறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுத்து வைப்போம் என்றார்.
அணு ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிக் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மிகப் பெரியதாக கருதப்படுகிறது.
16ம் தேதி கூட்டம்:
இதற்கிடையே, இரு கூட்டணிகளின் அரசியல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திட்டமிட்டபடி 16ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் 16ம் தேதி நடப்பதாக இருந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதே தேதியிலேயே கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குழுவின் தலைவர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரியிடம் நேற்று பேசினார்.
16ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான இடதுசாரிகளின் புதிய நிலை குறித்து விவாதிக்கப்படும்.
பாஜக சாடல்:
இடதுசாரிகளின் இந்த பல்டியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளோம். அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இடையே நடந்து வந்த மோதல் ஒரு டிராமா என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம். தற்போது அது நிரூபணமாகியுள்ளது.
நந்திகிராம் விவகாரத்தில் இடதுசாரிகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். இதன் காரணமாகவே அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தர அவர்கள் இறங்கி வந்துள்ளனர். இதுதான் இந்த மாற்றத்திற்குப் பின்னணி என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.