ஐடிஐ மேம்பாட்டுக்கு உலக வங்கி ரூ. 1231 கோடி நிதியுதவி
டெல்லி: நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஐடிஐக்களை மேம்படுத்த ரூ. 1231 கோடி நிதியுதவியை உலக வங்கி வழங்குகிறது.
இதுகுறித்து டெல்லியில் நடந்த பொருளாதர பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் பேசுகையில், நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஐடிஐ-க்களை மேம்படுத்தி, உலகத் தரம் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க உலக வங்கி ரூ. 1231 கேடி நிதியுதவியை அளிக்கவுள்ளது.
இதுதவிர நமது அரசுத் தரப்பில் ரூ. 160 கோடி ஒதுக்கப்படும். இந்த நிதியைக் கொண்டு ஐடிஐக்களை சிறந்த பயிற்சி மையங்களாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ. 66 ஆக இது இருந்தது. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த குறைந்தபட்ச ஊதியத்தை முறையாக அனைத்து நிறுவனங்களும் தர வேண்டும். இதை மாநில அரசுகள் கண்காணித்து வர வேண்டும் என அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறையின் இந்த உத்தரவை எந்த நிறுவனம் மீறினாலும் அந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பெர்னாண்டஸ்.