சரத்குமார் கட்சியின் கரூர் மா.செ. திடீர் விலகல் !
கரூர்: சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மகேஷ்வரன் திடீரென அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 17 வருடங்ளாக சரத்குமார் ரசிகர் மன்றத்தில் மாவட்ட தலைவராக இருந்த மகேஷ்வரனை சரத்குமாரே பரிந்துரை செய்து கட்சியின் கரூர் மாவட்ட செயலாளராக நியமித்தார்.
இந் நிலையில் கரூர்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட தலைவர் மகேஷ்வரனுக்கு அழைப்பு அனுப்பவில்லையாம்.
இந்த திருமண நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே சரவணன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் நெடுச்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மகேஷ்வரன் சரத்குமாரிடம் புகார் கூறினாராம். சின்ன பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என சரத்குமார் அறிவுரை கூறியுள்ளார். இதையடுத்து மகேஷ்வரன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
கட்சி ஆரம்பித்த சில வாரங்களில் ஒரு மாவட்ட தலைவர் விலகியுள்ளது சரத்குமாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.