For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாற்றில் புது அணை: துரைமுருகன் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது நடைமுறையில் சாத்தியமில்லாத காரியம். அணை கட்டும் முயற்சியை கேரளா தொடருமானால் அதை தமிழக அரசு சட்ட ரீதியாக சந்திக்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப் போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இதனால் அந்த மாநில மக்களின் பாராட்டைப் பெறலாமே தவிர, நடைமுறையில் அது சாத்தியமில்லாத விஷயம்.

அணை கட்டும் பணியை கேரளா தொடர்ந்தால், அதை சட்டரீதியாக தமிழகம் சந்திக்கும்.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்து விட்டதாகவும், இதுதொடர்பாக ஆய்வு நடத்த தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியுள்ளது பொய்யான புகாராகும்.

கேரள அரசு 1979ம் ஆண்டிலேயே அணையின் பலம் குறித்து கூக்குரலிட ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை 142 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க அனுமதிக்க முடியாமல் பிரச்சினையை உருவாக்கியது.

உண்மையில், தமிழக அரசுடன், கேரளாதான் ஒத்துழைப்பு தராமல் உள்ளது. அணையைப் பலப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டபோது கேரளா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பல்வேறு கட்ட சோதனைகள், ஆய்வுகள், மத்திய நீர்வள கமிட்டியின் சோதனைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்ட பின்னர்தான் அணை நல்ல நிலையில் இருப்பதாகவும், 136 அடியிலிருந்து 142 அடியாக நீர் தேக்க அளவை கூட்டலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு கேரள அரசு சம்மதிக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. அங்கு கேரள அரசு வாதிடுகையில், அணை கட்டி 100 ஆண்டுகள் ஆகி விட்டதால், அணை பலவீனமடைந்து விட்டது. தண்ணீர் தேக்கினால் அணை உடையும், ஐந்து மாவட்ட மக்கள் உயிரிழப்பார்கள் என வாதிட்டது.

ஆனால் விரிவான வாதங்கள், ஆய்வுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம், கேரள அரசின் வாதத்தை நிராகரித்தது. நீர் தேக்க அளவை 142 அடியாக உயர்த்தவும், அணையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கும் அனுமதி அளித்தது. ஆனால் அவசரச் சட்டம் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கிடப்பில் போட்டு விட்டது கேரளா.

எனவே, இத்தனை காலமும், கேரள அரசுதான் உச்சநீதிமன்றத்தின் ஒரு உத்தரவையும் மதிக்காமல் நடந்து கொண்டுள்ளது. பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க தமிழக அரசுடன் ஒத்துழைப்பு தராமல் நடந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசு ஒத்துழையாமை இயக்கத்தையே நடத்தி வருகிறது என்று கூறியுள்ளார் துரைமுருகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X