அறந்தாங்கியில் மிதக்கும் ராமர் கல்
அறந்தாங்கி&கரூர்: கரூர் மற்றும் அறந்தாங்கியில் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமர் கல் என்று கூறி ஒரு கல்லை வைத்து வணங்குவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமர் பாலம் விவகாரம் சூடு பிடித்து இந்தியாவை ஒரு கலக்கு கலக்கி வரும் இந்நிலையில் விஎச்பி போன்ற மதவாத அமைப்புகள் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லை, ராமர் கல் என்று கூறி தமிழகம் முழுவதும் வைக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
விஎச்பியின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதன் மாநிலத் தலைவர் வீரபாகு கரூர் வந்தார்.
கரூர் மினி பஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில், ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமர் கல் என்று கூறி ஒரு கல்லை வைத்து வீரபாகு உட்பட விஎச்பியினர் அனைவரும் சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்தனர்.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரில் மிதக்கும் ராமர் கல்லை கொண்டு வந்து ஐயப்ப சேவா சங்கத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தனர். இதனால் அந்த பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போன்று ராமர் கல்லை தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.