டெண்டர் எடுப்பதில் அடிதடி-திமுவினர் மீது வழக்கு
சிவகங்கை: டெண்டர் எடுப்பதில் நடந்த அடிதடி தொடர்பாக திமுவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.8.88 கோடிக்கு நெடுஞ்சாலை பணிகளுக்கான டெண்டர் பரமக்குடி நெடுஞ் சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது.
இந்த டெண்டரில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இதில் அவர்களுக்கு இடையே டெண்டர் எடுப்பதில் போட்டி ஏற்பட்டது. அப்போது அமைச்சர் பெரிய கருப்பன் ஆதரவாளர்கள், கண்ணப்பன் ஆதரவாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மதியழகன் என்பவர் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் பரமக்குடி போலீசார் திமுக மாவட்டத் துணை செயலாளர் சேங்கை மாறன், காளையர்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்தியநாதன், திமுக இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்கள் ரவி, நாராயணன், மாவட்ட பிரதிநிதி மார்த்தாண்டம், மானாமதுரை நகரச் செயலாளர் பொன்னுசாமி, இளையான்குடி சுரேஷ் ஆகியோர் மீது வழக்குர் பதிவு செய்துள்ளனர்.
பல கோடி ரூபாய் டெண்டருக்காக திமுவினர் அடித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.