மின்தடை தாற்காலிகமானது தானாம்-மீண்டும் சொல்கிறார் ஆற்காடு
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின் தடை தற்காலிகமானது தான் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி மீண்டும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் இருப்பதாகவும், இதனால் தொழில்துறையில் வெகுவாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்து ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த நவம்பர் 1ம் தேதியில் இருந்து காற்றாலைகள் மூலம் கிடைக்க வேண்டிய இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. மழை காரணமாக நெய்வேலி, கல்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து குறைவான அளவு மின்சாரம் தான் கிடைக்கிறது.
மத்திய அரசு தொகுப்பிலிருந்து கிடைக்கும் 380 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கவில்லை. இருப்பினும், அனல் மின் மற்றும் நீர் மின் நிலையங்களில் முழுமையாக மின்சாரம் கிடைப்பதால், தினசரி எட்டாயிரம் மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் 500 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க, கிராமப் புறங்களில் அரைமணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இந்த மின்தடை தற்காலிகமானது தான்.
விரைவில் குறைகள் சரி செய்யப்பட்டு, மின் வினியோகம் சீராகும். திமுக ஆட்சிக்கு வந்த பின் துவங்கப்பட்ட புதிய தொழிற்சாலைகளுக்கு 600 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது.
எதிர்கால தேவைக்காக வட சென்னையில் 500 மெகாவாட், மேட்டூரில் 500 மெகாவாட், குந்தாவில் 500 மெகாவாட், தூத்துக்குடியில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மூலம் 1,000 மெகாவாட், உடன்குடியில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதை பற்றியெல்லாம் அறிந்து கொள்ளாமல் யாரோ தந்த தகவலின் அடிப்படையில் மின்துறை மீதும், திமுக அரசு மீதும் ஜெயலலிதா பழி சுமத்தியிருக்கிறார் என அறிக்கையில் கூறியுள்ளார் ஆற்காடு.
மின்வெட்டு தாற்காலிகமானது தான் என ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கூறி வருகிறார் ஆற்காடு என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சிக்காலம் முடியும் வரை இதையே சொல்லிக் கொண்டிருப்பாரோ என்னவோ..