மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்-ஆசிரியருக்கு அடி-உதை
திருக்கோவிலூர்: பள்ளியில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சரவணன்.
இந்தப் பள்ளியில் சித்ரா (13) என்ற மாணவி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பறையை சுத்தம் செய்யுமாறு சித்ராவிடம் ஆசிரியர் கூறியுள்ளார். அப்போது அந்த மாணவியை கிள்ளியும், கட்டிப்பிடித்தும் சில்மிஷம் செய்துள்ளார்.
இதையடுத்து வகுப்பறையில் இருந்து சித்ரா ஓடிவிட்டார். அதை யாரிடமும் சொல்லவில்லை.
இந் நிலையில் மறுநாளும் வகுப்பை சுத்தம் செய்ய சித்ராவை அழைத்த சரவணன் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து பள்ளியை விட்டு வீட்டுக்கு ஓடிய மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
பெற்றோர் தலைமையாசிரியர் மார்கிரேட்டை சந்தித்து புகார் கூறியதையடுத்து சரவணனை பள்ளியில் இருந்து நீக்கி விடுவதாக உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், ஆசிரியர் சரவணன் நீக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று சரவணன் பள்ளிக்கு வந்தபோது அவரை சித்ராவின் உறவினர்களும் கிராம மக்களும் சேர்ந்து தாக்கினர்.
இதைத் தடுக்க முயன்ற பிற ஆசிரியர்களுக்கும் அடி, உதை விழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பள்ளியை கிராம மக்கள் முற்றுகையிட்டதையடுத்தை அறிந்த போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அங்கு விரைந்தனர். கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
சரவணனை நீக்கி கல்வித்துறையிடம் இருந்து உத்தரவு பெறப்பட்டு, அது கிராம மக்களிடம் காட்டப்பட்டது. இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.