ரூ. 7 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் படுகொலை
மரக்காணம் தர்மாபுரி வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் உப்பளம் வைத்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருக்கிறான். அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை. மகனை காணாமல் பதறிய பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் காணாமல் போன சிறுவனை தேடி வந்தனர்.
இதற்கிடையில் ராமமூர்த்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், நாங்கள் சென்னையிலிருந்து பேசுகிறோம். உங்கள் மகன் எங்களிடம் தான் இருக்கிறான். அவன் உயிருடன் வேண்டுமென்றால் ரூ.7 லட்சம் பணம் வேண்டும் என்று கூறியதுடன், நாங்கள் நக்சல் தீவிரவாதிகள் என்றும் கூறி போனை கட் செய்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும், மரக்காணம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த ஹரி என்பவர் சம்பவத்தன்று தனது மகனுடன் பேசிக் கொண்டிருந்தார் என்றும் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து ஹரியை போலீசார் பிடித்து தீவிர விசாரணை செய்ததில் சிறுவன் மணிகண்டனை பணத்திற்காக நான் தான் கடத்தினேன் என்று ஒப்புக் கொண்டார். சிறுவனை காஞ்சீபுரத்தில் சத்தியமூர்த்தி என்பவரிடம் கொடுத்து மறைத்து வைத்துள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து போலீசார் சிறுவனை மீட்க காஞ்சீபுரம் சென்றனர். காஞ்சீபுரத்தில் சிறுவன் மணிகண்டன் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொன்ன வீட்டை ஹரி அடையாளம் காட்டியவுடன் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து வீட்டிற்குள் இருந்த சத்தியமூர்த்தியை மடக்கி பிடித்தனர். ஆனால் வீட்டில் சிறுவன் இல்லை.
சிறுவன் எங்கே என்று சத்தியமூர்த்தியிடம் விசாரித்ததற்கு, மணிகண்டனை கடத்தி வெடால் காட்டு பகுதிக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவன் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். இதனால் அவன் அழாமல் இருக்க அவனுடைய வாயை பொத்தினோம். அப்போது அவன் மூச்சு திணறி இறந்து விட்டான்.
இதையடுத்து அவனை 3 தினங்களுக்கு முன்னர் புதைத்து விட்டோம். அதனால் தான் அவனின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டினோம் என்று படு கேஷுவலாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் ஹரியையும், சத்தியமூர்த்தியையும் கூட்டிக் கொண்டு அந்தக் காட்டுப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தை சத்தியமூர்த்தி அடையாளம் காட்டினார்.
இதையடுத்து உடலை தோண்டி எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுவன் கடத்தி படுகொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.