தமிழ்ச்செல்வன் பேனர் கிழிப்பு: காங். - திமுக தொண்டர்கள் மோதல்
கோபிச்செட்டிப்பாளையம்: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் காங்கிரஸாருக்கும், திமுக மற்றும் பெரியார் திராவிடர் கழக தொண்டர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோபியில், நேற்று மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் கருணாநிதி கவிதை வெளியிட்டதை கடுமையாக கண்டித்துப் பேசினார். தீவிரவாதத் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் ஒப்பாரிக் கவிதைகளை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்று கூறிய அவர், தமிழ்ச்செல்வன் பேனர்களை அகற்ற காங்கிரஸார் முன்வர வேண்டும் என்று பேசினார்.
அவர் பேசிய சில நிமிடங்களில் கோபி தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கிடுவுக்குச் சொந்தமான கடை முன்பு வைக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வனின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. மேலும் சில இடங்களில் இருந்த பேனர்களும் அகற்றப்பட்டன.
இதை திமுகவினர் தட்டிக் கேட்டனர். மேலும் சில காங்கிரஸாருக்கு அடி உதையும் விழுந்தது. அந்த வழியாக வந்த காங்கிரஸ் வாகனம் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது. திமுகவினருக்கு ஆதரவாக பெரியார் தி.க.வினர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு எழுந்தது.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர். பேனர் கிழிப்பு மற்றும் மோதல் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸாரின் செயலைக் கண்டித்து இன்று கோபியில் சாலை மறியல் மற்றும் இளங்கோவன் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை பெரியார் தி.க. அறிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.