மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயருகிறது
சென்னை: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிள், பேரூராட்சிளில் சொத்து வரியை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 6 மாநகராட்சிகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடைசியாக கடந்த 1998ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படவில்லை.
இந்த நிலையில் விதிகளுக்கு உட்பட்டு இந்த உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி விகிதத்தை மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரி விகித திருத்தம் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் நெறிமுறைகளை வெளியிடுவார். அதன் பின்னர் உள்ளாட்சி அமைப்புகள் தங்களது உள்ளாட்சிகளுக்கான சொத்து வரி திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் புதிய சொத்து வரி விகிதம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.