சபரிமலையில் கமாண்டோ படை கண்காணிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அங்கு கமாண்டோ படை போலீசாரும், உளவுப்படையினர் மாறுவேடத்திலும் தீவிரமாக பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 17ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. 41 நாட்கள் நடக்கும் இந்த மண்டல பூஜை திருவிழாவில் உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய இருமுடி கட்டி வருவார்கள்.
மண்டல பூஜை தொடங்கிய நாளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் கோழிக்கோடு மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு போன் மூலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று ஒரு மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சபரிமலை முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எங்கும் வெடிகுண்டு இல்லை. இருப்பினும் பாதுகாப்பை பலப்படுத்த சிறப்பு கமாண்டோ படை வீரர்கள் 10 பேர் சபரிமலை பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர உளவுத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற 60 பேர் பக்தர்களோடு பக்தர்களாக சாதாரண உடையில் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.