பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையே கடந்த 22ம் தேதி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுத்தது. இந்தியா 276 ரன்களைச் சேர்த்தது.
2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 247 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 203 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது.
நேற்றைய 4வது நாள் ஆட்ட முடிவில் சச்சின் டெண்டுல்கர் 34 ரன்களுடனும், கங்குலி 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனால் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு இந்தியா சென்றது.
வெற்றியைத் தொட்டு விட்ட சந்தோஷத்துடன் இன்று இந்தியா தனது கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கங்குலி மேலும் ரன்கள் சேர்க்காத நிலையில் அக்தர் பந்து வீச்சில் வீழ்ந்தார்.
பின்னர் களமிறங்கிய வி.வி.எஸ். லட்சுமணும், சச்சினும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி இலக்குக்கு இட்டுச் சென்றனர். 4 விக்கெட் இழப்பிற்கு 61.1 ஓவர்களில் 203 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.
இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் 56 ரன்களும், லட்சுமண் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தானின் சோயப் அக்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கும்ப்ளேவுக்கு மிகவும் ராசியான இந்த ஸ்டேடியத்தில், கேப்டனாக அவர் பங்கேற்ற முதல் போட்டியிலேயே இந்தியா வெற்றியைச் சுவைத்துள்ளது.
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய கேப்டன் அனில் கும்ளேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.