மயூரா தாக்குதல் வழக்கு: விஷ்ணுபிரசாத்துக்கு முன்ஜாமீன்
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் புகுந்த ஆயுதம் தாங்கிய கும்பல், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை தாக்கிக் காயப்படுத்தியது.
அரிவாளால் வெட்டப்பட்ட ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏவும், மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனுமான விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 10 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் விஷ்ணுபிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வார கால முன்ஜாமீன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் அவரது முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரகுபதி இந்த மனுவை விசாரித்தார். பின்னர் விஷ்ணுபிரசாத்துக்கு முன்ஜாமீன் வழங்கி அவர் உத்தரவிட்டார்.