விவசாயிகள் போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் கைது
திருவாரூர்: நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1000 குறைந்தபட்ச ஆதரவு விலை தரக் கோரி தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் நடந்த விவசாயிகளின் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது
செய்யப்பட்டனர்.
கோதுமைக்கு மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ. 1000 குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தருகிறது. அதேபோல நெல்லுக்கும் தர வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி ஆந்திராவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் தற்போது விவசாயிகள் தீவிரப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் போராட்டம் தொடங்கியது. காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்ளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர்.
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ உலகநாதன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கோட்டூரில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். திருத்துறைப்பூண்டியில் இன்று அதிகாலை பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் மொத்தம் 161 இடங்களில் சாலை மறியலும், 14 இடங்களில் ரயில் மறியலும் நடந்தது.
இன்று நள்ளிரவு வரை நீடிக்கும் இப்போராட்டத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட விவசாயிகள், நெல்லுக்கு மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.1,000 குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கா விட்டால் எங்கள் போராட்டம் தீவிரமாகும். இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டிவரும் என்று எச்சரித்துள்ளனர்.