மலேசிய தமிழர்கள் மீது தாக்குல்: விஜயகாந்த் கண்டனம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவில் உரிமைகளை கேட்டு போராடிய தமிழர்கள் மீது அந்நாட்டு அரசு தடியடி நடத்தி, காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை அடித்து இழுத்துச் சென்றது அதிர்ச்சி அளிக்கிறது.
போராட்டத்தில் கைதானவர்கள் மீது ராஜதுரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமரே கூறியிருப்பது காமன்வெல்த் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது.
மலேசிய அரசின் கொள்கையினால் ஓரங்கட்டப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டும்தான். இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கவே, அங்கு மக்கள் மகாத்மா காந்தியின் படத்தை ஏந்திக் கொண்டு அமைதி ஊர்வலம் சென்றுள்ளனர். அவர்கள் மீது மலேசிய அரசு கோரத் தாண்டவம் ஆடியுள்ளது.
மலேசியாவில் உள்ள தமிழர்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையையும், சம வாய்ப்பை பெறவும் மலேசிய அரசு நடவடிக்கை எடுக்க இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும், கைது செய்துள்ளவர்களை விடுவிக்கவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு பொறியாகத் தோன்றியது எவ்வாறு இலங்கையில் காட்டுத் தீயாக மாறி உள்ளதோ, அதைப் போல மலேசியாவிலும் ஆகாமல் இருக்க, மத்திய அரசு தனது மெத்தனப் போக்கை கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.