விடுதலைப் புலிகளின் வானொலி நிலையம் தகர்ப்பு
கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் வானொலியான வாய்ஸ் ஆப் டைகர் நிலையத்தை, இலங்கை விமானப்படையினர் குண்டு வீசித் தகர்த்தனர். இதில் 9 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நேற்று வானொலி மூலம் உரை நிகழ்த்தினார். கிளிநொச்சிக்கு அருகே உள்ள ஏ-9 சாலையில், உள்ள வானொலி நிலையத்தில் பிரபாகரனின் உரையை கேட்க பெரும் திரளான தமிழர்கள் கூடியிருந்தனர்.
அப்போது வானொலி நிலையத்தின் மீது இலங்கை விமானப்படையினர், 2 கே.பிர் விமானங்கள் மூலம் 12 குண்டுகளை வீசித் தாக்கினர்.
இத்தாக்குதலில் வானொலி நிலையப் பணியாளர்கள் 3 பேர் மற்றும் 6 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 4 வானொலி நிறுவனப் பணியாளர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வானொலி நிலைய அறிவிப்பாளர் இசைவிழி செம்பியன், வானொலி நிலையப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த கி.தர்மலிங்கம், சுரேஸ் லிம்பியோன் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் சிலர்.
கா.சாந்தபோதினி, அன்பரசி ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு வானொலி நிலையப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். மற்றவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை.