பள்ளிவாசல் விவகாரம்: கடையநல்லூரில் மீண்டும் பதற்றம், போலீஸ் குவிப்பு
கடையநல்லூர்: கடையநல்லூர் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது குறித்து இரு தரப்பினருக்கிடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளதால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் முபாரக் பள்ளிவாசல் உள்ளது. கடந்த 1994ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பள்ளிவாசலின் தலைவராக ஷேக் உதுமானும், செயலாளராக அப்துல் ஜாலீல் உள்பட பலர் நிர்வாக குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தனர்.
அப்துல் ஜாலீல் மறைவுக்கு பிறகு பள்ளி வாசலை நிர்வகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. பள்ளிவாசல் தங்களது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என ஜாக் மற்றும் தவ்ஹீத் ஜாமத் அமைப்பினர் உரிமை கொண்டாடினர்.
இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றது. தென்காசி உரிமையியல் நீதிமன்றத்தில் ஜாக் அமைப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை தொடர்ந்து ஜாக் அமைப்பினர் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி வந்தனர்.
இந் நிலையில் தவ்ஹீத் ஜாமத்தை சேர்ந்தவர்களும் இதே பள்ளிவாசலில் தொழுகை நடத்த முயன்றதால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போதும் அங்கு பதட்டம் ஏற்படவே பள்ளிவாசல் முன்பு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையே தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் முபராக் பள்ளிவாசல் நிர்வாக குழு சார்பாக தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து அந்த அமைப்பினர் பள்ளிவாசல் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து தொழுகை நடத்தினர்.
இது குறித்து ஜாக் அமைப்பை சேர்ந்த முகமது சிராஜீதின் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பள்ளி வாசல் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த தமிழ்நாடு தவ்ஜீத் ஜாமத் மாநில துணைத் தலைவர் சைபுல்லா காஜா, பள்ளிவாசல் தலைவர் ஷேகனா மற்றும் நிர்வாகிகள் ரஹ்மத்துல்லா, ஷேக் உதுமான், களந்தல் இப்ராகிம் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஜாக் அமைப்பினர் தென்காசி அமர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்றனர். இதனை தொடர்ந்து ஜாக் அமைப்பினர் முபராக் பள்ளிவாசலில் நுழைந்து அவர்கள் தொழுகை நடத்த முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
தென்காசி டி.எஸ்.பி மயில்வாகனன் கடையநல்லூர் விரைந்து இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.