வைகுண்ட ஏகாதேசி-புத்தாண்டு திருப்பதியில் விஐபிகளுக்கு சிறப்பு அனுமதி இல்லை
திருமலை: வைகுண்ட ஏகாதேசி மற்றும் புத்தாண்டு தினத்தன்று திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய விவிஐபி, விஐபி பாஸ் வழங்கப்படாது என்று திருப்பதி கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும்ம் வைகுண்ட ஏகாதேசி மற்றும் புத்தாண்டு தினத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். அப்போது விவிஐபி, விஐபி பாஸ்களை வாங்கிக் கொண்டு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், செல்வந்தர்களும் சொகுசாக தரிசனம் செய்வர். இதனால் பக்தர்கள் மேலும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவது வழக்கம்.
இந் நிலையில் இந்த ஆண்டு பாஸ்கள் வழங்கப்படாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரி ரமணாச்சாரி கூறியதாவது,
டிசம்பர் 19ம் தேதியிலிருந்து 21ம் தேதிவரை வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்கும், டிசம்பர் 30ம் தேதியிலிருந்து ஜனவரி 2ம் தேதிவரை புத்தாண்டை முன்னிட்டு நடக்கும் சிறப்பு தரிசனத்திற்கும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.
அதனால் இந்த நாட்களில் எந்தவொரு விஐபி, விவிஐபிக்களுக்கும் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது. அது மட்டுமில்லாது மற்ற சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
வைகுண்ட ஏகாதேசி மற்றும் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 3.30 மணி முதல் சர்வதர்ஷன் சேவை நடைபெறும். இது தவிர டிசம்பர் 20, 21 தேதிகளில் வைகுண்ட துவார சேவை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.