பாபர் மசூதி நினைவு தினம் - அயோத்தியில் தடை
அயோத்தி (உ.பி.): பாபர் மசூதி இடிப்பு தினம் நெருங்கி வருவதால் அயோத்தியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயோத்தி பாபர் மசூதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 15வது ஆண்டு தினம் டிசம்பர் 6ம் தேதி வருகிறது. இதையொட்டி உத்தரப் பிரதேச மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே எடுக்க ஆரம்பித்துள்ளது.
அதன்படி அயோத்தியில் தடை உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் டிசம்பர் 6ம் தேதியை தீரர்கள் தினமாக அனுசரிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அகில இந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் குழு துயர தினமாக டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாக இப்போதிருந்தே அயோத்தியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு அமலில் உள்ள காலகட்டத்தில் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.