'மலேசியத் தமிழர்கள் மீதான தாக்குதல் மிருகத்தனமானது'
ஷாஜாபூர் (ம.பி): மலேசியத் தமிழர்கள் மீதான தாக்குதல் மிருகத்தனமான, மனித உரிமையை மீறும் செயல் என காங்கிரஸ் தலைவரும், மத்தியப் பிரதேச மாநில சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் தலைவருமான இப்ராகிம் குரேஷி கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மலேசியாவில் அமைதியான முறையில் கூடிய இந்து சிறுபான்மையினர் மீது அந்நாட்டு போலீஸார் மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். இது கடுமையாக கண்டித்தக்கது, கவலை அளிக்கும் விஷயமாகும்.
மலேசியாவில் அரசு வேலைகளில் இந்துக்கள் அமர்த்தப்படுவதில்லை. இந்து கோவில்கள் வளர்ச்சி என்ற பெயரில் இடித்துத் தள்ளப்படுகின்றன.
இது மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான, மக்கள் விரோத, பாரபட்சமான நடவடிக்கையாகும்.
மலேசியாவின் சுதந்திரத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும், இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கும் மலேசிய இந்துக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். உலக சமுதாயத்தினருக்கு மலேசிய இந்துக்களும், முஸ்லீம்களும் பெரும் உதாரணமாக விளங்கிக் கொண்டுள்ளனர்.
ராமாயணக் கதைகளை இரு சமுதாயத்தினரும் அங்கு பல ஆண்டுகளாக நாடகங்கள் மூலம் நடத்திக் காட்டி இரு சமுதாயத்தினரின் ஒற்றுமையை உலக சமுதாயத்திற்குப் பறை சாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மலேசிய அரசு பாரபட்சமான போக்கைக் கடைப்பிடிப்பது வருத்தம் தருகிறது. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.