தமிழர்கள் கோரிக்கை குறித்து ஆராய மலேசிய பிரதமர் உத்தரவு
சிங்கப்பூர்: மலேசிய தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து அறிக்கை அளிக்குமாறு ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியை அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது படாவி கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியத் தமிழர்கள் விவகாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. தமிழர்கள் மீதான தாக்குதலையும், அடக்குமுறையையும் உலக நாடுகள் கண்டிக்கும் நிலை உருவாகி வருகிறது.
ஆரம்பத்தில் மலேசியத் தமிழர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கவே மறுத்து வந்த அந்நாட்டுப் பிரதமர் அப்துல்லா படாவியின் போக்கில் தற்போது புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் கோரிக்கைகள் என்ன என்பது குறித்து சிறப்பு குழு அமைத்துப் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையைத் தருமாறு மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியை பிரதமர் படாவி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சாமிவேலு கூறுகையில், பிரதமரை சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்தேன். அப்போது சிறப்புக் குழு அமைத்து தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
ஜூன் மாதம் இந்த அறிக்கை பிரதமரிடம் வழங்கப்படும். மலேசிய இந்திய காங்கிரஸ் விடுத்த கோரிக்கைகளை பிரதமர் பரிவுடன் கேட்டுக் கொண்டார். மேலும் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இருப்பினும் ஏற்கனவே இருக்கும் கோரிக்கைகள் தவிர புதிய கோரிக்கைகள் குறித்து ஆராய சிறப்புக் கமிட்டியை அமைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, அரசு நிறுவனங்களில் பணியில் உள்ள மலாய் இனத்தவர்கள் அல்லாதவர்களின் எண்ணிக்கை குறித்த விரிவான புள்ளி விவரம், தேசிய அளவிலும், மாகாண அளவிலும், உள்ளூர் நிர்வாக அளவிலும் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களின் எண்ணிக்கை, சுகாதாரம், கல்வி, நலம், இளைஞர் நலம் உள்ளிட்ட துறைகளில், மலாய் இனத்தவர்கள் அல்லாதவர்களுக்கும் முக்கியத்துவம் தருவது குறித்து இந்த சிறப்புக் குழு ஆராயும்.
இந்த ஆய்வுக்காக ஒரு கால் சென்டர் அமைக்கப்படும். ஹாட்லைன் வசதியும் செய்யப்படும். இதன் மூலம் அனைத்துத் தரப்பினும் இந்த குழுவை அணுகி தங்களது கோரிக்கைகளை வழங்கலாம். மேலும் கோவில்கள், தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் தாராளமாக வழங்கலாம்.
சமீபத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக கூறி ஒரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்துக்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளது.
இந்திய சமுதாயத்தினரின் பிரதிநிதியாக மலேசிய இந்திய காங்கிரஸ் உள்ளது. இந்தியர்களின் நலனைப் பாதுகாக்க இந்தக் கட்சி பாடுபடுகிறது. இந்தியர்களின் நலனைக் காக்கும் பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது.
இந்திய சமுதாயத்தினரின் நலனுக்காக தொடர்ந்து காங்கிரஸ் பாடுபடும். இதன் மூலம் 2020ம் ஆண்டுக்குள் மலாய் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினருடனும் இணக்கமாக செயல்பட்டு மலேசியாவை பெரும் சக்தியாக மாற்ற முடியும்.
மலேசிய பிரதமரின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து, அவருடைய உதவியுடன், இந்திய சமுதாயத்தினரின் உயர்வுக்காக தொடர்ந்து காங்கிரஸ் பாடுபடும் என்றார் சாமிவேலு.
மலேசிய அரசை ஐக்கிய மலாய் தேசிய இயக்கத்துடன், மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய சீன சங்கம் ஆகியவை கூட்டணி வைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. மலேசியா சுதந்திரமடைந்தது முதல் இந்தக் கூட்டணிதான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழர்கள் மீதான பாரபட்சப் போக்கால் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக முடிவு செய்தால் அது அரசுக்கு ஆபத்தாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைக் கருத்தில் கொண்டுதான் ஆரம்பத்தில் இறுக்கமாக இருந்து வந்த பிரதமர் படாவி தற்போது மெதுவாக இறங்கி வந்துள்ளார். மலேசிய காங்கிரஸ் கட்சியின் மூலம் நிலைமையை தணிக்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது.